சேஷாத்ரி ஸ்வாமிகள் – 6
ஒருமுறை சேஷாத்ரி ஸ்வாமிகளைப் பார்க்க சேலத்தில் இருந்து அன்பர் ஒருவர் நிறையப் பழங்கள் இனிப்புகள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். ஆனால் ஸ்வாமிகளைக் காணமுடியவில்லை. ஸ்வாமிகள் காஞ்சீபுரம் போயிருக்கலாமென எவரோ சொல்லக் கேட்டு அங்கு பயணம் ஆகவேண்டி வண்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகள் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து இந்த வண்டி காஞ்சீபுரம் போகுமா எனக் கேட்கவும் இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்களாம். பின்னர் கீழே இறங்கி சேஷாத்ரி ஸ்வாமிகளை வணங்கினார்கள். அதே போல் படிக்கமுடியாத ஏழைப்பையன் ஒருவன் சேஷாத்ரி ஸ்வாமிகளின் அருளால் தேர்ச்சி அடைந்தான். ஆனால் ஸ்வாமிகளோ பார்க்கப் பைத்தியம் போலவே இருப்பார். தன்னுடைய பெயரைக் கூட மறந்து தனக்கெனத் தனியான பக்தர் கூட்டமும் இல்லாமல் இருக்க இடம் இல்லாமல், உண்ண உணவுக்கெனத் தனியாக எதுவுமில்லாமல் கிடைப்பது போதும் என உண்டு கொண்டு மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பனியைப் பொறுத்துக் கொண்டு அண்ணாமலையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்.
அவர் அங்கிருக்கும் கடைத்தெருவில் எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் கடைக்காரர்கள் தாங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணினார்கள். அவர் கைப்பட்டால் தங்கள் பணப்பெட்டி நிரம்பி வழியும் எனத் திட்டமாக நினைத்தார்கள். ஆனால் சேஷாத்ரி ஸ்வாமிகளோ பணக்காரர்கள் அளிக்கும் எந்தப்பொருளையும் ஏற்றுக்கொண்டதே இல்லை. ஏழை அளிக்கும் பொருள் எளிமையாக இருந்தாலும் ஏற்பார். சில சமயங்கள் பலநாட்கள் தொடர்ந்து உண்ண உணவு கிடைக்காது. சில சமயம் உண்ண உணவு நிறையக் கிடைக்கும். அதற்கேற்றாற்போல் அவரும் சில நாட்கள் சேர்ந்தால் போல் சாப்பிடுவார். சில சமயங்கள் எதுவுமே சாப்பிடக்கிடைக்காது. தொடர்ந்து சில, பல நாட்கள் எதுவுமே சாப்பிட மாட்டார். அவருக்குக் கிடைக்கும் புதுத்துணிகளை ஏழை, பாழைகளுக்கு அளித்துவிடுவார். அப்படி ஏழை,பாழைகள் கிடைக்கவில்லை எனில் துணியைக் கிழித்துப் போட்டுவிடுவார். அவர் உடுத்தமாட்டார். கந்தல் துணி தான் கட்டுவார். எப்போது அமர்ந்தாலும் ஸ்வஸ்திக ஆசனத்திலேயே அமர்ந்து கொள்வார்.
ரமணரைச் சந்தித்து உபதேசம் பெற வேண்டித் திருவண்ணாமலைக்கு வந்த மைசூர் ஸ்வாமிகள் என ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்ட வள்ளிமலை ஸ்வாமிகள் ரமணரிடம் உபதேசம் கிட்டாமல் வடநாடெல்லாம் சென்று திரும்பி வந்து ரமணரிடம் சென்றபோது ரமணர் அவரைக் கண்டு, “போ! போ! இங்கே நிற்காதே! கீழே போ!” என்று விரட்டிவிடத் திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர் ரமணர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.
சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ் தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்!” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் உடல்நிலைக்கு ஏற்றபடி தன் ஸ்பரிசத்தால் குணப்படுத்திக் காட்டியதும் உண்டு. ஒருநாள் காலை ஆறுமணிக்கு ஆகாயத்தைப் பார்த்த ஸ்வாமிகள், “இதோ விட்டோபா! விட்டோபா போகிறார்!” என்று கூறச் சுற்றிலும் இருந்தவர்களுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
சற்று நேரத்தில் போளூரில் இருந்த விட்டோபா ஸ்வாமிகள் மஹாசமாதி அடைந்த செய்தி கிட்டியது. சுவாமிகளின் சூக்ஷ்ம திருஷ்டி இதிலிருந்து நன்கு புலனாயிற்று. வேறொரு நாள் ஒரு பதினைந்து வயதுப் பையனுக்குக் கம்பத்து இளையனார் சந்நிதியில் அம்பாள் உண்ணாமுலையின் தரிசனத்தைச் செய்து வைத்துப் பின்னர் அந்தப் பையன் அம்மன் சந்நிதிக்குச் செல்ல அங்கே பார்த்தால் தனக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள் காட்டிய அதே கோலத்தில் அம்பாள் அதே புடைவை, அதே மாலைகள் போன்ற அலங்காரத்தில் காட்சி கொடுப்பதைக் கண்டு வியந்து போனான். சாக்தரான சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு இதை நிகழ்த்துவது ஒன்றும் அதிசயம் அல்லவே!
இன்னொரு பக்தரின் மகனுக்கு வந்த ஜூரத்தில் அவன் கண்கள் தெரியாமல் போனது. பக்தர் மகனை அழைத்துக் கொண்டு சேஷாத்ரி ஸ்வாமிகளைச் சரண் அடைந்தார். ஸ்வாமிகள் அவரை மகனைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லச் சொன்னார். அப்படியே பக்தர் மகனை ஸ்வாமிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டார்.
அன்றிரவு ஸ்வாமிகள் அந்தப்பையனை அம்பாளின் சந்நிதியில் சென்று படுக்கச் சொன்னார். பையன் தயங்கிக் கொண்டே கோயிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியின் குருக்களிடம் சேஷாத்ரி ஸ்வாமிகள் சொன்னதைச் சொல்ல குருக்களும் ஸ்வாமிகள் பேச்சைத் தட்டக்கூடாதென்று அவனை அப்படியே சந்நிதியில் விட்டுவிட்டுப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார். மறுநாள் காலையில் கோயில் கதவைத் திறந்த போது அந்தப்பையன் தானாகவே உள்ளிருந்து ஓடி வந்தான். கண்கள் தெரிய ஆரம்பித்தன. அருணாசலம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது.
சரீரத்தில் இருக்கையிலேயே யோகசித்தியுடன் வேறொரு உருவத்தையும் சேஷாத்ரி ஸ்வாமிகள் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வள்ளிமலை ஸ்வாமிகள் சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்ற பின்னர் ஒரு முறை அவரைக் காண வந்தார். அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு மறுநாள் வள்ளிமலை செல்லவேண்டும் என உத்தரவு கேட்க சேஷாத்ரி ஸ்வாமிகள் தானும் வருவதாய்க் கூறவே சரி என மகிழ்வோடு ஒத்துக்கொண்டார் வள்ளிமலை ஸ்வாமிகள். இருவரும் ரயிலில் கிளம்பினார்கள்.
ரயில் கிளம்பிய உடனே சேஷாத்ரி ஸ்வாமிகள் அதிலிருந்து குதித்துவிட்டார். வள்ளிமலை ஸ்வாமிகள் ஏமாற்றத்துடன் வள்ளிமலை சென்றார். ஆனால் சேஷாத்ரி ஸ்வாமிகளோ உரத்த குரலில் அவரைப் பார்த்து, “நீ வள்ளிமலைக்குப் போ! பின்னாலேயே நானும் வருகிறேன்.” என்று கூற வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. வள்ளிமலை வந்ததும் பொங்கித்தாய்க்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு வந்த வள்ளிமலை ஸ்வாமிகள் எதிரே சேஷாத்ரி ஸ்வாமிகள் சிரித்த வண்ணம் நின்றார். உடனே கீழே விழுந்து வள்ளிமலை ஸ்வாமிகள் வணங்கிவிட்டு எழுந்து பார்க்கையில் ஓர் அணில் பிள்ளை வேகமாக ஓடுவதைக் கண்டார். சேஷாத்ரி ஸ்வாமிகள் அணிலின் உருவில் வந்திருப்பதை அறிந்து கொண்டார்.