சென்னையில் 2-வது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில், சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நிறைவு நாள் விழாவில் பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அந்த முதலீட்டாளர் மாநாட்டின் இறுதி நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2,900 தொழில் முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தொழிற் துறை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் தொழில் அமைப்பினரும் இம்மாநாட்டுக்கு திரளாக வர உள்ளனர். வாகனம், மென்பொருள், ஜவுளி ஆகிய துறைகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.