புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவிற்கு, 2019-20 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், 1,03,000 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் 4.5% அதிகமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
டெல்லி காவல்துறை மத்திய உள்துறையின் கீழ் வருகிறது. அதற்கு இந்த பட்ஜெட்டில் 7,600 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு 2,600 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.
எல்லைப் பாதுகாப்பு படை, சிபிஆர்எப், இந்தோ திபெத்தியன் எல்லை படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சாஸ்த்ரா பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு காவலர்கள், அஸ்ஸாம் படை ஆகியவற்றுக்கு 71,618.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 68,000 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.
மத்திய உளவுத்துறைக்கு 2,198.35 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 3378 கோடியை காவலதுறையை நவீனப்படுத்தவும், 2000 கோடி உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை செலவுக்கும், 1,330 கோடியை பாதுகாப்பு படையிலுள்ள பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நிர்பயா பண்டின் கீழ் 50 கோடியை பெண்கள் பாதுகாப்பிற்கு மேலும் ஒதுக்கி உள்ளது.
10,000 கோடியை இயற்கை பேரிடர் சமயங்களில் பயன்படுத்த ஒதுக்கி உள்ளது.