இலக்கியம்செய்திகள்

தினம் ஒரு குறள்: தூது

தினம் ஒரு குறள்

அதிகாரம்: தூது

பரிமேலழகர் இந்த அதிகாரமும், இதற்கு முன்னர் நாம் பார்த்த அதிகாரமான,  ‘வினை செயல்வகை’யும், ஆட்சியாளர்களுக்காகச் சொல்லப்பட்டது என்று பாயிரத்தில் குறிப்பிடுகிறார்.

இன்று கிட்டத்தட்ட மன்னராட்சி முறைமை உலகெங்கிலும் ஒழிக்கப்பட்ட நிலையிலும், அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, இந்த அதிகாரத்தின் தேவை இன்றளவும் இருப்பதால், பகை என்பது நாடு தாண்டி, வீடு வரை வந்துவிட்டதாலும், மத்யஸ்தம் என்பது அத்தியாவசியப் பட்ட நிலையில், தூது என்ற அதிகாரம் சொல்லும் தூதுவருக்கான இலக்கணத்தை சற்றே மனதில் உள்வாங்க எத்தனிப்போம்!

குறள்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

அனைவரிடத்து அன்பும், மிகத் தேர்ந்த நல்லெண்ணம், நற்செயல், நன்னெறிகொண்ட குடியில் பிறந்திருத்தலும், ஆட்சியாளர்கள், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் விரும்பும் வண்ணம் திறன்பெற்ற குணநலன்கள் பொருந்தியவராய் இருப்பதும் ஆகிய இம்மூன்றும் தூது செல்பவனுக்கே உரித்தான பண்பு என்று வரையறுக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

முதல் வார்த்தையே அன்பில்தான் ஆரம்பமாகிறது.  அன்பிருந்தால் தான், அருள் பிறக்கும். அருள் பிறந்த இடத்தில் அனைத்து உயிர்களும் ஒன்றாகும். அத்தகைய பண்பு உயர்ந்த குணநலன்களையும், செய்கைகளையும் ஊக்குவித்து, சான்றோர் பெருமக்கள் மதிக்கத்தக்க வகையில் ஒருவனை உருவாக்கும் ஆற்றல் பெற்றது.

இவ்வாறாக செயல்படும்போது, ஆட்சியாளர்களின் நம்பிக்கை அவர்பால் ஏற்பட்டு, அவர்சார்பில் அடுத்த அரசாங்கத்திற்கு அவர் கூறும் செய்திகளை எடுத்துரைக்கத் தகுதியானவர் என்ற எண்ணம் வலுப்பெறும்.  அத்தகைய எண்ணம் ஆட்சியின் எல்லை தாண்டி, அன்னியர்க்கும் தூதுவரின் பால் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தவே இம்மூன்று பண்புகளை  முதல் குறளிலேயே வைத்தார் வள்ளுவர்.

இது சாதாரண வாழ்க்கைக்கும் பொருந்தும்.

(Visited 32 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close