ரஃபேல் விமானம் வாங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது சௌக்கிதார் சோர் ஹை என்று மோடியை உச்சநீதிமன்றம் திருடன் என்று சொன்னதாக பேசினார்.
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் ஊழல் நடப்பதாக ஆதாரமில்லை என்று சொல்லிவிட்டது. பின்னர் காங்கிரஸ் சார்பில் மறு சீராய்வு மனு போட்டனர். அதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இதை வைத்துக்கொண்டு பேசிவரும் ராகுல்காந்தி மோடி திருடர் என்று கோர்ட் சொல்லிவிட்டதாக பேசினார்.
பிஜேபி வக்கீலும் எம்பியுமான மீனாட்சி லேகி ராகுல் நீதிமன்றத்தை வைத்து பொய் சொல்லி அரசியல் செய்வதாக வழக்கு போட்டார். “நாங்கள் எப்போது மோடி பற்றி பேசினோம்? மனுவை விசாரணைக்கு ஏற்றோம். இதை நீங்கள் எப்படி திரித்து அரசியலாக்கலாம்? விளக்கம் சொல்லுங்கள்.” என்றது உச்சநீதிமன்றம்.
இன்று காலை நீதிமன்றத்தில் ராகுல்காந்தியின் வக்கீல் ஆஜராகி ராகுல் காந்தி கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை சமர்ப்பித்தார். பிரச்சாரத்தில் இருப்பதால் நேரில் வர இயலவில்லை என்றும், நீதிமன்றத்தை அரசியல் பேச்சில் இழுத்தது தவறு என்றும் ராகுல் காந்தி கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தில் எழுதியிருந்தார்.
மேலும் மோடி மீது கோர்ட் சொல்லாத குற்றச்சாட்டை சொன்னது போலப் பேசியது தவறு என்றும் ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தை அவமதிக்க நினைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு டெம்போ ஏற்றுவதற்கு தான் பேசியதாகவும் ஆனால் அதற்கு காவல்காரர் திருடர் (சௌக்கிதார் சோர் ஹை) என்று கோர்ட் சொன்னதாக அர்த்தம் வந்துவிட்டது என்றும் அதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் ராகுல்காந்தி எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இது காங்கிரஸ் பிரசாரத்தில் பெரும் பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பிஜேபி ராகுலின் மன்னிப்பை பெரிய அளவில் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் மற்றும் ஆதரவு ஊடகங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும் பொய் சொல்லி மன்னிப்புக் கேட்டார் என்பது இருக்கிற நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் இருக்கிற மற்ற கட்டத் தேர்தல்களில் ரஃபேல் என்றாலே “பொய் சொல்லி கோர்டில் மன்னிப்புக் கேட்டீர்களே அது தானே?” என்பார்கள் பிஜேபி ஆட்கள். பிரசாரத்துக்கு வேறு வலுவான குற்றச்சாட்டு காங்கிரஸ் வசம் இல்லை. காங்கிரஸ் எப்படி பிரச்சாரம் செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.