இந்தியாசெய்திகள்

இஸ்லாமிய சகோக்களுக்கு அன்புடனும் அக்கறையுடனும் ஓர் கடிதம்

ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் மூன்று தினங்களுக்கு முன்பாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குண்டுகளை ஒன்பது இடங்களில் தொடர் வெடிப்பு செய்தது. இதில் சில இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதலையும் நிகழ்த்தியது. இதுவரை 321 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 500 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

முதல் இரு தினங்களில் சமூக வலைத்தளங்களில்யாரும் இதற்கு பொறுப்பேற்காத நிலையில், பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். பல்வேறு கருத்துகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தான் இதைச் செய்திருக்கும். மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்பவே இதைச் செய்திருக்கும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்த நிலையில் அதை ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

 

தீவிரவாத குண்டுவெடிப்புகளில் அரசின் பொறுப்பு என்பதைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டு செல்வதில் எந்தப்பலனும் இல்லை. தினந்தோறும் நம்மைச் சுற்றி இஸ்லாமிய தீவிரவாதிகள் உலகில் அனைத்து நாடுகளிலும் செய்து வரும் பயங்கரவாதச் செயல்கள் சொல்லி மாளாது. இந்தியா போன்ற நாடுகளில் கூட 2000 களில் தான் இஸ்லாமிய சமூகம் உடை, உணவுப்பழக்கம், நடைமுறை என அனைத்திலும் அரேபிய கலாச்சாரத்திற்கு மாறி வந்தது என்பதைக் காண இயலும். அதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு வந்தவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் கொடுத்த அறிவுரைகளைப் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் போன்ற தரப்புகளுக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்களிடம் நமது அடையாளம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும், நாம் இஸ்லாமியர் என்பதை அருகில் உள்ளவர் உணரச் செய்ய வேண்டும் போன்ற கலாசார அடையாளங்களைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் அவர்கள் மெல்ல மெல்ல மாற்றினார்கள். பெரும்பாலான பெண்களை அபயா, புர்கா அணிவது கட்டாயம் என்ற இடத்திற்கு மத அடிப்படைவாதிகள் மெல்ல மாற்றினார்கள். இப்போது அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

 

இணையதளம், தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரின் செயல்பாடும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் சில விஷயங்களை நன்கு கவனிக்க வேண்டும். இந்தியாவின் பெரும் சமூகமான இந்துக்கள் சக இந்துக்களின் வழிபாடு, மதக் குருக்களைப் பின்பற்றுதல், அறநிலையத் துறை என்ற பெயரில்  கோவில்களை வைத்து நடக்கும் ஊழல்கள், இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் என அனைத்தையும் விமர்சிப்பதை நீங்கள் எளிதாக காண இயலும்.

 

நம்முடைய அடிப்படை அனுபவத்திலிருந்து இதை மிகுந்த வலியுடன் சொல்கிறோம். இஸ்லாமிய சகோதரர்களாகிய நீங்கள், இலங்கை குண்டுவெடிப்புக்குக் காரணமாகவோ, புல்வாமோ தாக்குதலுக்குக் காரணமாகவோ இருந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை எதிர்த்து, எத்தனை பேர் மாற்று மத சகோதரர்களிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தினீர்கள்? இது போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பால் பெரும் இஸ்லாமிய சமூகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?  மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி உங்களுடன் சகஜமாக பேசுகிறார்களா? அல்லது அவர்களிடம் ஏதேனும் உங்களிடம் பேசுவதில் தயக்கம் உள்ளதா? தயக்கத்துடன் தான் உள்ளனர் என்பதே நமது சோக அனுபவமாக உள்ளது.

 

உங்களில் ஆயிரக்கணக்கில் யாரோ ஓரிருவர் நிச்சயமாக இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து எழுதுகிறார்கள். அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். சாமானிய இஸ்லாமியர்கள் இத்தீவிரவாதச் செயலை ஆதரிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை நீங்கள் எதிர்ப்பதில் தயக்கம் இருக்கிறதோ என்ற அச்சம் உள்ளது.

 

இஸ்லாமிய சகோதரர்கள் எத்தனை பேர் வலிய மாற்று மத சகோதரர்களிடம் புல்வாமா, இலங்கை தாக்குதலில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து உரையாடி இருக்கிறீர்கள்? உங்களுக்குப் புரிகிறதா என்று தெரியவில்லை. மாற்றுமத சகோதரர்கள் இதுபோன்ற தாக்குதலை தங்களுக்குள் எந்தவித தயக்கமும் இன்றி பேசுகிறார்கள். ஆனால் உங்களிடம் பேச அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது. அதற்குக் காரணம், உங்களை அவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்பதல்ல! அவர்களின் அச்சத்திற்குக் காரணம் எங்கு இஸ்லாமைத் தவறாகப் பேசுகிறோம் என்று இஸ்லாமிய சகோதரன் புரிந்து கொள்வானோ என்ற தயக்கமும் அச்சமும் உள்ளது. இதை உடைத்து எறிய வேண்டிய இடத்திலும் பொறுப்பிலும் நீங்கள் உள்ளீர்கள்.

 

இஸ்லாமிய சமூகத்தினர் பொது வெளிகளில் இஸ்லாமியர்கள் சிலரைப் பிடித்து இவர்கள் தான் தீவிரவாதிகள் என்று அரசு வேண்டுமென்றே குற்றம் சாட்டும் என்ற வகையில் மிக சிறிய எண்ணிக்கையில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் எழுதுவதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் தங்கள் சமூகத்தின் பெரும்பாலோரையும் அது பாதிக்கலாம் என்று எண்ணுவதில்லை.

 

எந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பும் குண்டுவெடிப்பிற்குப் பொறுப்பேற்காத பட்சத்தில் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஏதோ ஒரு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் ஒவ்வொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் பொறுப்பு ஏற்கிறார்கள். சாதியின் பெயரால் ஒரு வன்முறையை ஆதிக்க சாதியோ தாழ்த்தப்பட்ட சமூகமோ செய்யும் போது அவை இரண்டுமே பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதற்கு அந்த குறிப்பிட்ட சாதிகளின் வன்முறை என்றே அழைக்கிறோம். ஆனால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணங்கள் சொல்லப்படுவதாலேயே அவை இஸ்லாமிய தீவிரவாதம் என்று பொது வெளியில் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்கள் உடனடியாக செய்ய வேண்டியது. இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து எழுதுவது, மாற்று மத சகோக்களிடம் இதை எதிர்த்துப் பேச வேண்டியது. அவை ஒரு சுமூகமாக சமூக உறவுக்கு வழிவகுக்கும். அதைச் செய்வது தவறு என்று உணரும் பட்சத்தில் காவல்துறையோ, பாதுகாப்புப்படையோ உங்கள் உடைகளை வைத்து, உங்கள் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து உங்களைச் சோதனை செய்யும். அது சாமானிய இஸ்லாமியனுக்கு வலியை ஏற்படுத்தும். இதுபோன்ற சோதனை செய்யும் பொது மாற்று மத சகோதரர்கள் காவல்துறையிடம் முன்வந்து உதவுவதில் கூடத் தயக்கம் ஏற்படும். ஏனெனில் நீங்கள் அவர்களிடம் இதுபோன்ற இஸ்லாமிய தீவிரவாதம் நடந்த சமயத்தில் என்ன மாதிரியான மனநிலையை வெளிப்படுத்தினீர்கள் என்று தெரியாதவராக இருப்பார். அதனால் அவருக்கு உதவுவதில் தயக்கம் ஏற்படும். நீங்கள் தேவையில்லாமல் சோதனைக்கு உள்ளாகி உள்ளீர்கள் என்பதைப் புலம்ப மட்டுமே முடியும். பெரும் சமூகம் ரயில் பிடிக்கும் வேகத்தில் உங்களைக் கவனிக்காது நகர்ந்து செல்லும் என்பதை உணர்ந்து நீங்களும் இதை வெளிப்படையாக எதிர்க்க வேண்டிய அவசியத்திலும் கட்டாயத்திலும் உள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

(Visited 78 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close