ஆன்மிகம்

அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!

“சாமி ! போன கதையில் ராமானுஜர் மேல்கோட்டையில் இருந்த சமயம், கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் இருந்தார் அல்லவா ? அப்போது அங்கே ஒரு சம்பவம் நடந்தது” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.

காஞ்சிக்குப் பக்கத்தில் கூரம் என்ற ஊரில் பிறந்தவர் கூரத்தாழ்வான். இவருக்கு நிலங்கள் பல உண்டு, பெரிய செல்வந்தர். எல்லோருக்கும் அன்னதானம் செய்வார். கொடை வள்ளல்.

ஒரு நாள் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாள் கோயில் கதவுகள் சாத்திய பிறகு பெருமாளும் பெருந்தேவி தாயாரும் ஏகாந்தத்தில் இருந்தார்கள். பக்கத்தில் திருக்கச்சி நம்பிகள் விசிறிக்கொண்டு இருந்தார். ‘தடார்’ என்று ஒரு கதவு சாத்தும் சத்தமும், மணி ஓசையும் தூரத்தில் கேட்டது.

தாயார் ”நம்பிகளே நம் கோயில் கதவு சாத்தி வெகுநேரம் ஆகிவிட்டதே! இந்தக் கதவு நம் கோயில் கதவு சத்ததை விடப் பெரிதாக இருக்கிறதே ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் ”இது கூரத்தில் இருக்கும் கூரேசன் அரண்மனை கதவுகள் மூடப்படும்போது அதில் இருக்கும் மணிகளின் சத்தம். இப்போது தான் அங்கே அன்னதானம் முடிந்திருக்கிறது” என்றார். பெருமாள் “கூரேசன் நம்மைவிடப் செல்வந்தர் போலிருக்கிறதே!” என்றார் சிரித்துக்கொண்டு

மறுநாள் கூரேசனைப் சந்தித்த நம்பிகள். முந்தைய நாள் நடந்த விஷயத்தைச் சொன்னார். கூரேசன் சந்தோஷப்படவில்லை. செல்வந்திரனாகத் தனக்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் வேண்டாம். ராமானுஜரின் சீடன் என்ற அடையாளமே வேண்டும் என்று தன் செல்வம் அனைத்தையும் மற்றவர்களுக்குத் தானம் செய்துவிட்டு தன்னை விட எட்டு வயது இளையவரான தன் குரு ராமானுஜரை நோக்கித் திருவரங்கம் புறப்பட்டார்.“சாமி! ‘செல்வம்’ வேண்டாம்’ என்று புறப்பட்டார் ஆழ்வான். இது அவருடைய முதல் ‘வேண்டாம்’!” என்று தொடர்ந்தாள் அந்தச் சின்னப் பெண்.

ஆழ்வானும், அவர் மனைவி ஆண்டாளும் கூரத்திலிருந்து திருவரங்கம் புறப்பட்டார்கள். வழியில் ஒரு காட்டின் வழியே சென்றபோது பொழுது சாய்ந்து இருட்டானது. ஆண்டாள் கண்களில் பயம் தெரிந்தது. ஆழ்வான் “ஆண்டாள் ஏன் பயப்படுகிறாய் ? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும் ? நாம் தான் எல்லாவற்றையும் துறந்துவிட்டோமே!” என்றார். அப்போது ஆண்டாள் “தினமும் நீங்கள் அமுது உண்ணும் தங்கக் கிண்ணியை மட்டும் மடியில் வைத்திருக்கிறேன்! உங்களுக்காக” என்று மடியில் முடிந்து வைத்திருந்த கிண்ணியை வெளியே எடுத்தாள்.

ஆழ்வான் ஆண்டாளிடமிருந்து அந்தக் கிண்ணியை வாங்கி “இது நமக்கு எதற்கு ? வேண்டாம்!” என்று அதை வீசி எறிந்தார். “இப்போது பயம் போய்விட்டதா ?” என்று தொடர்ந்து திருவரங்கம் நோக்கி நடந்தார்கள் என்று அந்தப் பெண் கதையை நிறுத்தினாள். “இது அவருடைய இரண்டாவது ‘வேண்டாம்! சரியா பிள்ளாய்!” என்றார் ஒரு சிஷ்யர்“ஆம் சாமி!” என்று அவள் தொடர்ந்தாள்.

ராமானுஜரும் ஆழ்வானும் போதாயனர் செய்த அரிய நூல்களைப் படிக்கக் காஷ்மீரத்தில் சாரதா பீடம் சென்றார்கள். அங்கே இருந்த அரசன் இந்த நூல்களை நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்தான். ராமானுஜரும் ஆழ்வானும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த காஷ்மீரத்துப் பண்டிதர்கள் அதை ராமானுஜரிடமிருந்து பறித்துக்கொண்டார்கள். கைக்கு எட்டிய மிக அரிய பொக்கிஷம் நம்மைவிட்டுப் போய்விட்டதே! என்று வருந்தினார்.

அப்போது ஆழ்வான் “வருந்த வேண்டாம்! நான் நேற்றே நீங்கள் உறங்கியபின் அதை முழுவதும் படித்தேன். இப்போது எனக்கு மனப்பாடம். உங்களுக்கு இங்கேயே சொல்லவா அல்லது திருவரங்கம் சென்றபின் சொல்லவா ?” என்றார்.

”இது மூன்றாவது வேண்டாம்! சரியா பெண்ணே!” என்றார் இன்னொரு சிஷ்யர்“ஆம் சாமி!” என்று சிரித்துக்கொண்டு அடுத்த கதையை ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.

இதற்கிடையில் கூரத்தாழ்வானுக்குக் கண் பறிபோனது. சோழ அரசனுக்கு ராமானுஜர் மீது கடும் கோபம். ராமானுஜர் தொடர்புள்ளவர்கள் யாரையும் கோயிலுக்குள் விடக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தான். திருவரங்கத்தில் ஒரு நாள் அரங்கனைச் சேவிக்கச் சென்றார் கூரத்தாழ்வான்.

கோயில் காவலாளி ஒருவன் “நீர் ராமானுஜர் கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆயிற்றே அதனால் உமக்குக் கோயிலில் அனுமதி இல்லை!” என்றான். பக்கத்தில் இருந்த இன்னொரு காவலாளி “இவர் பெயர் ஆழ்வான். ராமானுஜரைச் சேர்ந்தவர் தான் ஆனால் இவர் மிகவும் பண்பானவர். நல்லவர். சாது . இவரைக் கோயிலுக்குள் விடலாம்!” என்றான்.

இதைக் கேட்ட ஆழ்வான் “நல்ல குணம் ஒரு ஆசாரியனை அடைய உதவ வேண்டும். ஆசாரியனின் சம்பந்தம் பெருமாளை அடைய உதவும். ஆனால் நீங்களோ என் என் ஆசாரியன் ராமானுஜர் சம்பந்ததை ஒதுக்கிவிட்டு, என் குணத்தால் பெருமாளைச் சேவிக்க அனுமதி அளிக்கிறீர்கள். ஆசாரியன் சம்பந்தம் இல்லாமல் எனக்குப் பெருமாளே வேண்டாம்” என்று திரும்பிவிட்டார்.

“ஆசாரியன் இடம் தான் உச்சம் ஆண்டவன் இரண்டாம் பட்சம்! என்று ஆழ்வான் போல நான் சொன்னேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்.

பக்கத்தில் இருந்த சிஷ்யர் “பெண்ணே ! ராமானுஜரும் அரங்கனை ஒரு முறை வேண்டாம் என்றிருக்கிறார்!” என்றார்அந்தப் பெண் யோசித்துவிட்டு “அட ஆமாம் சாமி, ஆளவந்தாரைச் சந்திக்க ராமானுஜர் திருவரங்கம் வந்தபோது, ஆளவந்தார் பரமபதம் அடைந்துவிட ராமானுஜருக்கு அரங்கன் மீது கோபம். அப்போது அரங்கன் வேண்டாம் என்று சென்றுவிட்டார்!” என்றாள்.

அப்போது ஒரு சிஷ்யர் “ஆழ்வான் கல்வி, குலம், செல்வம் என்ற செருக்குகளை வென்றவர்!” என்றார்”அத்வைதம் வென்றேனோ எம்பெருமானரைப் போலே!”

(Visited 265 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close