ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 29
விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்
எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்=ஒளிமயமான விண்ணுலகில் வசிக்கும் தேவர்களும் அணுகமுடியாத , காணமுடியாத இறைவன், ஒளியும், இருளும் நிறைந்த பூமியில் வசிக்கும் நம் போன்ற அடியார்களும் தொண்டு செய்து உய்யுமாறு
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்= இந்த மண்ணகத்துக்கு வந்து நம்மை எல்லாம் வாழச் செய்தான். நாம் பிறவி எடுத்ததே இவ்வண்ணம் இறைத்தொண்டு செய்யவேண்டியே. அதுவும் பரம்பரை பரம்பரையாய்ச் செய்து வருகிறோம். வண்மை பொருந்திய திருப்பெருந்துறை ஈசனே, உமக்கு நாங்கள் வழி வழியாய் அடியார்களாய் இருக்கின்றோம்.
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்= எங்கள் கண்ணின் மணியாக இருந்து எங்களுக்குப் பார்வையைத் தந்து களிப்படைய வைக்கும் தேனினும் இனியவனே, பாற்கடலில் வந்த அமுதானவனே, நற்கரும்பே, இங்கே கரும்பைச் சுட்டியது அடிமுதல் நுனி வரையிலும் இனிப்பான கரும்பைப் போல் ஈசனும் இனிமையானவன் என்பதற்காக. உம்மை விரும்பி நாடிடும் அடியார்கள்
எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே= எண்ணத்திலே உணர்வு பூர்வமாய் எழுந்தருளி இருப்பவனே. உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் உயிர் தந்து காத்து ரக்ஷித்து ஆள்பவனே, எம்பெருமானே, எம் உள்ளத்தில் வந்து பள்ளி எழுந்தருள்வாய்.