தந்தை அழுவதைக் கண்டு சேஷாத்ரியும், கணவன் அழுவதைக் கண்ட மரகதமும் பயந்து போனார்கள். மரகதம் மனதில் கவலையும் திகிலும் புகுந்தது. கணவனிடம் காரணம் கேட்க அவரோ ஆனந்தக் கண்ணீர் என்று சொல்லிச் சமாளித்து விட்டார். சேஷாத்ரியும் மேலே எதுவும் பேசாமல், கேட்காமல் பாடசாலைக்குச் சென்று விட்டார். மகன் சென்ற பின்னர் வரதராஜ ஜோசியர் மனைவி மரகதத்தைத் தனியே அழைத்து, “மரகதம்! நான் சொல்வதைக் கேட்டு உன் மனதைத் திடமாக வைத்துக்கொள். காமாட்சி என்னை அழைக்கிறாள். நாளை சூரியோதயத்துக்கு முன்னர் நான் கிளம்பி விடுவேன். நம் மகன் சேஷாத்ரி காமாட்சி அருளால் பிறந்தவன். பெரும் புகழோடு வாழப் போகிறான். ஆனால் அதைக் காண நான் இருக்கப் போவதில்லை. நீ இன்னும் சிறிது காலம் இருந்து சேஷாத்ரியின் புகழைக் கண்களால் கண்டு காதுகளால் கேட்டு இன்புற்றுப் பின்னர் என்னிடம் வந்து சேர்வாய்!” என்றார். இதைக் கேட்ட மரகதம் மூர்ச்சை அடைந்து விழுந்தாள். வரதராஜ ஜோசியர் ஞானம் அதிகம் உள்ளவர் ஆதலால் இதைச் சொல்கையில் அவர் சிறிதும் தடுமாறவில்லை. வருத்தமும் தெரியவில்லை. ஆனால் மரகதமோ துடிதுடித்துப் போனாள்.
வரதராஜ ஜோசியர் அன்று முழுவதும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும், காமாட்சி கோயிலிலும் தியானம் செய்து கொண்டே அமர்ந்திருந்தார். இரவும் வெகு நேரம் கழித்தே வீடு வந்தார். உணவு ஏதும் உட்கொள்ளாமல் படுக்கச் சென்றார். இரவில் திடீரென அவர் உடல்நலம் குன்றியது. விரைவில் நாடியும் தளர்ந்து போக விடியற்காலை நேரம் தன் அருமை மகன் சேஷாத்ரியைத் தன் அருகே அழைத்து இறுகத்தழுவிக் கொண்டார். மகனிடம் எத்தனை சாஸ்திரங்கள் கற்றாலும் அனுபவம் ஒன்றே பெரியது என்பதை வற்புறுத்திக் கூறிவிட்டுத் தன் கண்களை மூடினார். அதன் பின்னர் வரதராஜ ஜோசியர் கண்களைத் திறந்தே பார்க்கவில்லை. மரகதம் மனம் வருந்தி நொந்து போய் அழுது கொண்டே இருந்தாள். நினைவிலும், கனவிலும் கணவர் நினைவே, அவரோடு குடித்தனம் நடத்திய நிகழ்வுகளே முன் வந்து நின்றன. மனவேதனை அதிகமாக ஆக இனித் தான் உயிருடன் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு உணவைக் குறைத்துக் கொண்டு சந்நியாசினி போல் எந்நேரமும் தியானமும், ஜபமும் செய்ய ஆரம்பித்தாள். சேஷாத்ரியும் அவர் தம்பியும் தாயின் வேதனையைக் குறைக்க முயல்வார்கள். காமகோடி சாஸ்திரிகளோ எனில் தாம் அருமையும் பெருமையுமாக வளர்த்த பெண் படும் கஷ்டங்களைக் கண்டு மனம் வருந்தி இடம் மாறினால் சரியாகும் என எண்ணி அங்கிருந்து அவர்களைக் காஞ்சீபுரத்திலிருந்து வழூர் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது சேஷாத்ரிக்குப் பதினான்கு வயது ஆகிவிட்டபடியால், அவனுக்கு பிரம்ம சூத்திரங்கள், பகவத்கீதை, உபநிடதம் ஆகியவற்றைப் போதித்தார் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள். தன் வம்சத்திற்கே உரிய மந்திர உபதேசங்களையும் செய்து வைத்தார். தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். பதினைந்து வயது சேஷாத்ரிக்கு ஆனபோது திருவாங்கூர் சம்ஸ்தானத்தின் திவானாக இருந்த சர்சி.பி.ராமசாமி ஐயரின் தாய்வழிப்பாட்டனார் ஆன திரு வெங்கடசுப்பையரின் வீட்டில் ஸ்ரீமத் பாகவதமும், ராமாயணமும் ப்ரவசனம் செய்தார் சேஷாத்ரி. இத்தனை சின்ன வயதில் சிறுவன் சேஷாத்ரி இவ்வளவு அழகாய் ஸ்லோகங்களைக் கூறி அவற்றுக்குப் பொருளும் கூறியதைக் கண்ட அனைவரும் வியந்தனர். இதன் நடுவில் காமகோடி சாஸ்திரிகளுக்குத் தமக்கு வயதாகி விட்டதால் சந்நியாசம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து சந்நியாசம் வாங்கிக் கொண்டு அருகிலுள்ள காஞ்சிபுரத்திலேயே வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயே தங்கினார். மரகதம் தினமும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கே சென்று பிக்ஷை அளித்து வந்தாள். பின்னர் அவரின் சகோதரர் வந்து அவரை அழைத்துச் சென்றுவிட சேஷாத்ரி தம் தாய், தம்பியோடு மீண்டும் காஞ்சிபுரத்தில் சித்தப்பா ராமசாமி ஜோசியரின் பாதுகாப்பில் இருந்து வரலானார். அப்போது காஞ்சிக்கு மேற்கே இருக்கும் தாமல் என்னும் ஊரில் அவரின் அத்தை வெங்கடலக்ஷ்மி என்பவர் வசித்து வந்தார்.
வெங்கடலக்ஷ்மிக்குக் “காகினி” என்னும் பெயருள்ள பெண் ஒருத்தி கல்யாணத்துக்குத் தயாராக இருந்தாள். அவளை சேஷாத்ரிக்கு மணம் முடிக்க வேண்டும் என அத்தையார் எண்ணம். சேஷாத்ரி புத்தி கூர்மையோடு அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்ததோடு தன் அன்னையிடம் கற்ற சங்கீதப் பயிற்சியின் மூலம் தன் தாத்தாவான காமகோடி சாஸ்திரிகள் இயற்றிய தேவி கீர்த்தனங்களை நன்கு பாடவும் செய்வார்.
ஆகவே அவரின் தேஜஸும், அழகும் மனதையும் கவர அத்தையார் தன் சகோதரரிடம் வந்து சேஷாத்ரிக்கும், காகினிக்கும் திருமணம் முடிப்பது குறித்துப் பேச்சைத் துவங்கினாள். ஆனால் ராமசாமி ஐயரோ திட்டவட்டமாக அதை மறுத்தார். வெங்கடலக்ஷ்மிக்கு துக்கம் ஒருபுறம், கவலை மறுபுறம். அண்ணனிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்க ராமசாமி ஜோசியர் சேஷாத்ரியின் ஜாதகத்தைத் தாம் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்ததாகவும் அது சந்நியாச யோக ஜாதகம் எனவும், குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதில்லை எனவும் குடும்ப வாழ்க்கையே அந்த ஜாதகருக்குக் கிடையாது எனவும் கூறினார்.
அண்ணனும் தங்கையும் பேசிக் கொண்டிருந்தது அங்கே ஓரமாக முற்றத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த மரகதத்தின் காதுகளிலும் விழுந்து விட்டது. அதிர்ச்சி அடைந்த மரகதம் அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். இதைக் கேள்வியுற்ற சேஷாத்ரி தாயைப் பல விதங்களிலும் தேற்றினார். சகல சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்குதன் எதிர்காலம் குறித்தும் ஓரளவு தெரியும். அவர் மனமும் அதிலேயே நாட்டத்தைச் செலுத்தி வந்தது. என்றாலும் தன் தாய்க்கு இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் வெளிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டாம் என்றே நினைத்தார்.
அன்றிலிருந்து மரகதத்தின் தேக ஆரோக்கியம் குன்ற ஆரம்பித்து விட்டது. தன் அருமை மூத்த மகனை, காமாட்சியின் அனுகிரஹத்தால் பிறந்தவனை சந்நியாசிக் கோலத்தில் எப்படிக் காண்பது எனத்துடித்துப் போனாள். நினைத்து நினைத்து உருகிய மரகதம் படுத்த படுக்கையாகவே ஆனாள். மருந்து உட்கொள்ளவும் திடமாக மறுத்துவிட்டாள். சேஷாத்ரியும் தாயின் மாசற்ற அன்பையும் அவள் இப்போது இருக்கும் நிலையையும் எண்ணி எண்ணி மனம் வருந்தினார்.
ஒரு ஏகாதசி தினத்தன்று சேஷாத்ரியைத் தன் அருகே அழைத்த மரகதம், “அம்பே சிவே” என்னும் பாடலைத் தன் பெரியப்பாவும் தன்னை வளர்த்தவருமான காமகோடி சாஸ்திரிகளால் இயற்றப்பட்ட பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாள். தன்னால் இயன்றவரை தானும் அந்தப் பாடலைப் பாடினாள்.
பின்னர் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் இருந்து
“ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலத்வே ஜீவன் முக்தி” என்ற ஸ்லோகத்தை சேஷாத்ரியின் மார்பில் அடித்த வண்ணம் மூன்று முறை கூறினாள். இவ்வாறாகத் தன் அன்னை மூலமே சேஷாத்ரி பிரம்ம ஞான தத்துவம் உபதேசம் பெற்றார்.
இதன் பின்னர் மரகதம் “அருணாசல! அருணாசல! அருணாசல” என மூன்று முறை வாய் விட்டுக் கூறினாள். அருணாசல மஹிமையைக் கூறும் ஸ்லோகத்தையும் தன் குமாரனின் நெஞ்சில் கை வைத்த வண்ணம் கூறினாள். அதோடு அவள் உயிர் பிரிந்தது. தாயும் இன்றித் தகப்பனும் இன்றிச் சித்தப்பாவின் ஆதரவோடு வாழ ஆரம்பித்தனர் சகோதரர் இருவரும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமையால் அண்ணனின் குழந்தைகளைத் தன் கண்ணின் கருமணி போல் பாவித்து வளர்த்து வந்தார் ராமசாமி ஜோசியர்.