ஆன்மிகம்செய்திகள்

சேஷாத்ரி ஸ்வாமிகள் – 4

சேஷாத்ரியின் அத்தை பெண்ணான காகினிக்கு வேறொரு பையனுடன் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் துச்சமாகக் கருதிய சேஷாத்ரிக்கோ இவை எல்லாம் பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை. எந்நேரமும் பேரருளின் துணையை நாடினார். பூஜை அறையில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த அருணாசல மலையின் சித்திரம் மனதில் பதிந்தது. அவர் அருணாசலத்தை நேரில் கண்டதில்லை. அன்ன ஆகாரம் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் நெடுநேரம் துர்கா ஸூக்தத்தை ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து உட்கார்ந்திருப்பார். சித்தப்பாவும், சித்தியும் அவரைக் கோபித்தும் பலனில்லை. ரொம்பக் கோவித்தால் தொந்திரவு அதிகமாகிவிடுவதாக எண்ணிக் கோயிலுக்குச் சென்று விடுவார். வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலோ அல்லது காமாட்சி கோயிலிலோ அமர்ந்து கொண்டிருப்பார். அம்பாளுக்கு நமஸ்காரம் செய்த வண்ணம் இருப்பார். வீட்டுக்குச் செல்லும் எண்ணமே வராது. சித்தப்பா ராமசாமி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து அவரைக் கண்டு பிடித்து வீட்டில் கொண்டு சேர்ப்பார். சித்தப்பாவின் கட்டளைக்காக ஒருநாள் இரண்டு நாள் இருந்துவிட்டு மீண்டும் கிளம்பி விடுவார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரைக் கண்டாலே சித்த பிரமை பிடித்தவர் போல் காணப்படுவார். அவர் நிலையைக் கண்டு பொறுக்க முடியாமல் சித்திக்கும், சித்தப்பாவுக்கும் வயிறு எரிந்தது. 

அதோடு சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு இறையின் உயர்தன்மை தவிர்த்து வேறே ஏதும் கண்களுக்குத் தெரியவில்லை. புரியவும் இல்லை. தானே மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் சொல்லுவதும் ஆத்ம தரிசனம் கிட்டியதற்கு ஆனந்தம் அடைபவருமாக இருந்து வந்தார். பார்க்கிறவர்களுக்கோ இது புரியவில்லை. சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு சித்த பிரமை பிடித்துவிட்டதாகவே நினைத்தார்கள். மன நலம் சுத்தமாய்க் கெட்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டு அவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்கள். அவரைச் சோதிக்க எண்ணி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியான பதிலைச் சொல்லி அதற்கேற்ற தெளிவான ஞான விளக்கமும் கொடுத்துவிடுவார். அதைக் கேட்கும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். திகைத்துப் போயினர். “காமோ கார்ஷீத்” மந்திரத்தை மட்டுமே அவர் ஒன்றரை லக்ஷம் முறை ஜபித்ததாகச் சொல்லுவார்கள். சில நாட்களில் கோயில்களுக்குச் செல்வதையும் நிறுத்திய சேஷாத்ரி காலையும், மாலையும் மட்டும் வீட்டில் இருந்துவிட்டு இரவுகளில் மயானத்துக்குச் சென்று அங்கே அமர்ந்து ஜெபித்து வந்தார்.

வீட்டில் உள்ளவர்களுக்குப் பல நாட்கள் கழித்தே இது தெரியவந்தது. ஆகவே அவர்கள் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் சேஷாத்ரியோ தாம் ருத்ர ஜபம் செய்வதாகவும் ருத்ர பூமியிலேயே அதைச் செய்ய வேண்டும் என்பதாகவும் கூற அவர் சித்தப்பா அவரை ஓர் அறையில் அடைத்துப் பூட்டினார். தன்னை அறையில் அடைத்துப் பூட்டியதையும் ஓர் நன்மைக்கே எனக் கருதிய சேஷாத்ரி உட்பக்கத்துத் தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டு அறைக்குள்ளேயே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து மந்திரங்களை ஜபம் செய்ய ஆரம்பித்தார். அன்ன, ஆகாரமின்றி இம்மாதிரி அவர் அமர்ந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வெளியே அவரை யாரும் கூப்பிடவும் இல்லை. அவரும் வெளியே வரப் பிரயத்தனம் ஏதும் செய்யவில்லை. 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் சேஷாத்ரி வெளியே வர முயற்சியே செய்யாததைக் கண்டு பயந்து போன அவர் சித்தப்பா ராமசாமி ஜோசியர் கதவைத் திறந்து சேஷாத்ரியை வெளியே அனுப்பி விட்டார். அவரோ மீண்டும் ருத்ர ஜபத்தை ருத்ர பூமியிலேயே செய்ய ஆரம்பித்தார். கடுமையாக உபவாசம் இருந்து உடலை வருத்தி ஜபம் செய்து வந்தார். ஜபம் செய்யச் செய்ய அவர் உள்ளத்தில் தோன்றிய ஒளியானது அவர் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் ராமசாமி ஜோசியரோ கவலை அதிகமாகி சேஷாத்ரியைக் கோவிக்க ஆரம்பித்தார். மயானத்திற்குச் சென்றுவிட்டு சேஷாத்ரி அப்படியே வீட்டுக்குள் நுழைவது அவருக்குப் பிடிக்கவே இல்லை.

ஆனால் சேஷாத்ரியோ வீட்டில் ஏதேனும் வேலை செய்யச் சொல்லிக் கொடுத்தால் கூட அதைச் செய்கையில் திடீரென வீட்டிற்கு வெளியே வந்து ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே வருவார். என்னவென்று கேட்டால் தேவதைகள் பாடிக்கொண்டு போவதாயும் கூடவே கந்தர்வர்களும் காணப்படுவதாயும் கந்தர்வ கானம் காதுகளில் கேட்டதாகவும் சொல்லுவார். சேஷாத்ரிக்குப் பைத்தியம் என்றே சித்தப்பா நினைத்து வந்தார்.  ஆனால் சேஷாத்ரியோ இதைக் கண்டு சிறிதும் கலங்காமல் உலக பந்தத்தில் சிக்கிக் கொண்டு அதற்கான கர்மாக்களைச் செய்து கொண்டு வரும் கர்மிகளுக்கு இவை எல்லாம் புரியாது, காதுகளிலும் விழாது என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்று விட்டார். 

சேஷாத்ரியின் போக்கைக் குறித்துக் கவலை கொண்ட அவர் சித்தப்பாவான ராமசாமி ஜோசியர் சேஷாத்ரியின் ஜாதகம் சொல்லுவதை எல்லாம் நன்கு அறிந்திருந்தும் அவருக்குத் திருமணம் செய்வித்தால் ஒரு வேளை மாறுவாரோ என நினைத்தார். மேலும் உள்ளூரில் இருந்த உறவினர்களும் நண்பர்களும் கூட இதையே கூறி வற்புறுத்தினார்கள். ஆனால் அவருடைய சுபாவமும், ஜபம், தபம் போன்றவைகளையும் ருத்ரபூமியில் வாசம் செய்வது போன்றவற்றை அறிந்திருந்த பெண் வீட்டுக்காரர்கள் கட்டாயமாய்ப் பெண் கொடுக்க முடியாது எனச் சொல்லிவிட்டார்கள். சித்தப்பா ராமசாமி ஜோசியர் மனம் உடைந்து போய்த் தன் அண்ணன் மகன் சேஷாத்ரியின் எதிர்காலம் குறித்துக் கவலை அடைந்து புலம்ப ஆரம்பித்தார். சேஷாத்ரியிடமே அவர் புலம்பல்கள் அதிகரித்தன. சேஷாத்ரியோ சித்தப்பாவைத் தேற்றிச் சமாதானம் செய்தார். கல்யாணம் என்ற பேச்சை ஆரம்பித்தால் தான் வீட்டை விட்டுப் போய்விடுவதாகவும் கூறினார். அதோடு கல்யாணப் பேச்சு நின்று போக உறவினரான பரசுராம சாஸ்திரிகள் என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று ஜபம் செய்துவிட்டுப் பின்னர் வீட்டுக்குள் நுழைவதை ஏற்கவே முடியாது என்று அடித்துச் சொன்னார்.

அன்று முதல் சேஷாத்ரி வீட்டிற்குள் நுழைவதையும் நிறுத்தி விட்டுக் கோயில்கள், குளக்கரைகள், மரத்தடி என்று பொழுதைக் கழித்தார். அப்போது காஞ்சீபுரத்திற்கு ஹரித்வாரிலிருந்து பாலாஜி ஸ்வாமிகள் என்பவர் தம் நான்கு சீடர்களொடு வந்திருந்தார். அவர் சர்வதீர்த்தக்கரையில் இருந்த விஸ்வநாத ஸ்வாமி ஆலயத்தில் தங்கி இருந்தார். அவரைக் கண்டதும் சேஷாத்ரி உணர்ச்சிவசப்பட்டுக் கால்களில் விழுந்து வணங்கினார். அவரை சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியாகவே கருதி தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தைக் கூறி அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் மாலையென வழிந்து கொண்டிருந்தது. பாலாஜி ஸ்வாமிகள் சேஷாத்ரியைச் சாந்தம் செய்து அமைதியுடன் இருக்கும்படி கூறித் தம் அருகே அமர வைத்துக்கொண்டார். சேஷாத்ரியும் அவரும் சாஸ்திர சம்பந்தமாகப் பேசிக்கொண்டு தமக்குள்ளாக மகிழ்ச்சி அடைந்தனர். தம் பார்வையாலேயே சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு நயன தீக்ஷை கொடுத்துவிட்டார் பாலாஜி ஸ்வாமிகள். சேஷத்ரி ஸ்வாமிகள் அவருக்கு ஐந்தாவது சீடராக மாறிப் பணிவிடைகள் செய்து வந்தார். 

பாலாஜி ஸ்வாமிகள் சேஷாத்ரி ஸ்வாமிகளின் மனம் இவ்வுலக பந்தங்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார். மனதளவில் அவர் ஒரு சந்நியாசியாக இருப்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே சேஷாத்ரி ஞான சந்நியாசத்துக்கு ஏற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு அவருக்குச் சந்நியாசம் வழங்கி மஹாவாக்கியங்களையும் உபதேசமாக அருளிச் செய்தார்.

முறைப்படி சந்நியாசம் வாங்கிக் கொண்ட சேஷாத்ரி ஸ்வாமிகள் அந்த பிரம்மானந்தத்தில் தன்னை மறந்து திளைத்தார். அப்போது சேஷாத்ரியின் தகப்பனார் வரதராஜ ஜோசியரின் ச்ராத்தம் வரவே சித்தப்பா ராமசாமி ஜோசியர் இரண்டு வலிமையான நபர்களின் உதவியோடு தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சேஷாத்ரியைக் கட்டிப் பிடித்து வீட்டுக்கு இழுத்து வந்து சேர்த்து ஓர் அறையிலும் தள்ளிப் பூட்டினார். சேஷாத்ரியோ தாம் சந்நியாசி ஆகிவிட்டதாயும் இத்தகைய கர்மாக்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனவும் வாதாடினார். ஆனால் சித்தப்பா விடாமல் அறையைப் பூட்டிச் சாவியைத் தம்மிடமே வைத்திருந்தார். ச்ராத்தம் முடிந்ததும் புரோகிதர்களை வணங்கி ஆசிகளைப் பெறும் நேரமும் வந்தது.  அறையைத் திறந்து சேஷாத்ரியை அழைத்தால் அறையில் சேஷாத்ரி இல்லை. அறை காலியாக இருந்தது. 

(Visited 93 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close