ஆன்மிகம்
Trending

அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே!

சாமி! பூவிருந்தவல்லி என்ற ஊரில் வைசிய குலத்தில் பிறந்தார் திருக்கச்சி நம்பி” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண். பெற்றோர்கள் அவருக்கு வைத்த வைத்த பெயர் கஜேந்திர தாசர். கச்சி என்றால் காஞ்சிபுரம். அதனால் இவருக்குத் திருக்கச்சி நம்பி என்று பெயர் ஏற்பட்டது. அது எப்படி என்பது சுவாரசியமான கதை என்றாள்.

ராமானுஜர் “பெண்ணே ! நீ சொல்லுவது எல்லாமே சுவாரசியமாகத் தான் இருக்கிறது!” என்றார்.

அந்தப் பெண் வெட்கத்துடன் தொடர்ந்தாள்.சிறுவயதில் திருக்கச்சி நம்பி பெருமாளிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டு இருந்தார். தினமும் பெருமாளுக்கு பூப்பறித்துக் கொடுப்பார். பெருமாள் கதைகளை விரும்பிக் கேட்பார். இவர்களுடைய குலத்தொழில் வியாபாரம். இவருடைய தந்தை அந்த ஊரில் வியாபாரம் செய்துவந்தார். நம்பிக்கு வாலிப வயது வந்தபோது இவருடைய தந்தை வியாபாரத்தைச் சொல்லிக்கொடுத்து, கொஞ்சம் செல்வம் கொடுத்து வியாபாரம் செய்து பிழைத்துக்கொள் என்றார்.

நம்பிகள் தந்தை கொடுத்த பணத்தைப் பெருமாளுக்கும், அவருடைய அடியார்களுக்கும் செலவு செய்தார். இந்த விஷயம் தந்தைக்குத் தெரிந்தது. . “கொடுத்த செல்வத்தை வீணடித்துவிட்டாயே!” என்றார்.

அதற்கு நம்பிகள் ”வீணடிக்கவில்லை. அந்தச் செல்வத்தை வைகுண்டத்தில் விதைத்துவிட்டேன். அங்கே செல்லும்போது அறுவடை செய்துகொள்ளலாம் என்றார். அவருடைய தந்தைக்கு மிகுந்த கோபம் வந்து நம்பிகளைத் திட்டினார். நம்பிகள் வீட்டை விட்டு வெளியேறித் திருவரங்கம் சென்றார்.

திருவரங்கத்தில் ஆளவந்தார் என்ற வைணவ குருவிற்குச் சீடரானார். பெருமாளுக்கு ஏதாவது கைங்கரியம் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தார். ஒரு விசிறிச் செய்து எடுத்துக்கொண்டு திருவரங்கன் முன் சென்று விசிறத்தொடங்கினார்.

அரங்கன் “நம்பியே இரண்டு பக்கமும் காவிரி ஓடுகிறது. அதைச் சுற்றி மரங்களும் செடிகளும். நல்ல ஜில் என்று காற்று வருகிறது. நீர் வேற விசிறினால் எனக்குச் சற்று குளிர்கிறது” என்றார்.

நம்பி விசிறியுடன் திருமலைக்குச் சென்றார். அங்கே திருவேங்கடவனுக்கு விசிறத் தொடங்கியதுமே “நம்பியே! நான் இருப்பதோ ஒரு மலை. என் தலைக்கு மேல் மேகங்கள். சுற்றி காடுகள். இரண்டு பக்கமும் அருவிகள். எப்போதும் குளிர் இங்கே. நீ வேற விசிறினால் எனக்கு நடுங்குகிறது! என்றார்.

நம்பி திருமலையிலிருந்து இறங்கினார் காஞ்சிபுரம் வந்தார். வரதராஜ பெருமாள் என்ன சொல்லப்போகிறாரோ நினைத்தார். காஞ்சி தேவப் பெருமாளுக்கு விசிறத் தொடங்கினார். மெலிதான காற்று பெருமாள் மீது பட, காஞ்சி பெருமாளுக்கு அது இதமாக இருந்தது.

பெருமாள் மகிழ்ந்து “திருக்கச்சி நம்பியே ! நான் ஹோம குண்டத்திலிருந்து தோன்றியவன். அந்த வெப்பம் இன்னும் என்னைச் சுடுகிறது. நீ விசிறியது யசோதை கண்ணனுக்கு விசிறியது நினைவுக்கு வந்தது. தினமும் நீ வந்து எனக்கு இப்படி விசிற வேண்டும் என்று கூறினார்.

நம்பிக்கு மிகுந்த சந்தோஷம். அதனால் காஞ்சிபுரத்திலேயே தங்கி தினமும் தேப்பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு புரியத் தொடங்கினார். தினமும் பெருமாளுக்கு இவர் விசிறிவிடும்போது “நம்பி இன்று ஊரில் என்ன செய்தி ?” என்று அவருடன் பேசிக்கொண்டு இருப்பார். நாளடைவில் இவர் பெருமாளுக்கு உற்ற தோழனாகிவிட்டார்.

காஞ்சிபுரத்தில் ராமானுஜர் என்பவர் குரு வாசம் செய்துகொண்டு இருந்தார். ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த அபிமானம் வைத்திருந்தார். இருவரும் பெருமாளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

ராமானுஜர் திருக்கச்சி நம்பியைத் தன் குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நம்பி மறுத்துவிட்டார். அதனால் ராமானுஜருக்கு சில சந்தேகங்கள் மனதிலிருந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

ஒரு நாள் “நம்பியே நீங்கள் தினமும் பெருமாளுடன் பேசுகிறீர்கள். எனக்கு மனதில் சில சந்தேகங்கள் இருக்கிறது. பெருமாளிடம் அதற்கு விடை கேட்டுச் சொல்லுங்களேன்!” என்றார். நம்பி. நம்பியும் சரி கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

அன்று மாலை பெருமாளுக்கு விசிறிவிடும்போது நம்பிகள் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தார் “ராமானுஜருக்கு சில சந்தேகங்களாம்” என்றார். பெருமாளும் “அப்படியா ? என்று ஆறு வார்த்தைகள் கூறிவிட்டு. இதை ராமானுஜரிடம் சொல்லுங்கள். அவருக்குத் தெளிவு பிறக்கும்” என்றார். நம்பியும் அந்த ஆறு வார்த்தைகளை ராமானுஜரிடம் கூறினார். ராமானுஜரும் சந்தோஷத்துடன் நம்பியை வணங்கினார்.

“சாமி நான் திருக்கச்சி நம்பியைப் போலப் பெருமாளுக்கு விசிறினேனா ? அவரைப் போலப் பெருமாளிடம் பேசினேனா ? அவரைப் போலப் பெருமாளுக்கும் ராமானுஜருக்கும் பாலமாக இருந்தேனா ? எதுவும் செய்யவில்லை அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் “பெண்ணே ! பெருமாள் சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் என்ன ? “ என்று கேட்டார். அந்தப் பெண் “அது எனக்குத் தெரியாது சாமி! ஆறு வார்த்தைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஒன்று ராமானுஜருக்குப் பெரிய நம்பியே ஆசாரியன் என்பது. மற்றவை எனக்குத் தெரியாது” என்றாள்.

கூட இருந்த சிஷ்யர் ஏதோ பேச ஆரம்பிக்க ராமானுஜர் அவரைப் பேசாமல் இருக்கச் சொல்லிவிட்டு “பெண்ணே அந்த ஆறு வார்த்தைகளை உனக்குப் பிறகு சொல்கிறேன்” என்றார்.

அப்போது இன்னொரு சிஷ்யர் “பெண்ணே! பெரிய நம்பிகள் தான் திருப்பாணாழ்வார் பாசுரத்துக்குத் தனியன் எழுதியவர்” என்றார். உடனே அந்தப் பெண் “அவன் மேனி ஆனேனோ திருப்பாணாரைப் போலே!” என்றாள்.

(Visited 142 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close