தினம் ஒரு குறள்
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
எவ்வித ஆசைகளுக்கும் இடங்கொடாமல் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கும் உள்ளத் தூய்மை, எதிர் நாட்டுத் தலைவர் ஒரு வேளை மாறாகப் புரிந்து கொண்டு, அதனால் விளைவு மோசமாயின், அவர் தம் ஆலோசகர்களின் துணை கொண்டே இயல்பானவற்றை விளக்கும் தன்மை, வேற்று நாட்டவரின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் தன் கடமையில் தவறாமல் நிற்கும் துணிவு, இம்மூன்றானும் கூடிய வாய்மையும் மட்டுமே தனது தலைவனின் எண்ணக் கூற்றை அவன் வழியிலேயே சிறிதும் பிறழாது, வேற்று நாட்டுத் தலைவனுக்கு எடுத்தியம்பும் தூதுவனுக்கு உண்டான இலக்கணம் ஆகும்.
நண்பர்களே, இந்த அதிகாரம் என்பது எந்நாட்டவர்க்கும் ‘அயல்நாட்டு விவகாரக் கையேடாக’ இருக்க வேண்டியத் தன்மை படைத்தது என்பதை நாம் அறிவதும், இத்தகைய அடையாளங்கள் தோன்றிய இனத்தில்தான் நாம் பிறந்திருக்கிறோம் எனும் பெருமையை உணர்வதும்,
இதையே நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்த முயல்வதும் தான் நாம் நமது அடுத்த சந்ததிக்குச் செய்யும் தலையாய கடமையாகும்!