செய்திகள்புத்தக விமர்சனம்

கிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா ?

கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் உலாத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிச்சியமானவர்தான் ஜோதிஜி. ஒரு புறம் பெரியாரைப் பிடிக்கும், ஒரு புறம் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் ஆதர்சம். ஒரு புறம் மோதியையும் பிடிக்கும் என்று கலந்து கட்டிய சராசரி தமிழனுக்காக சரியான உதாரணம். என்ன ஈ வே ராவைப் முகப்புப் படமாக வைத்ததால் ஒரு சாராராலும், மோதியைப் பிடிக்கும் என்று சொல்வதால் முகமூடி சங்கி ஓன்று மற்றவர்களாலும் தள்ளி வைக்கப்பட்டு தனியாக இயங்குபவர்.

பல்வேறு புத்தகங்களைப் படித்து அதன் தாக்கத்தால் எழுதுபவர்கள் ஒருபுறம், தான் கண்ட, அனுபவித்த வாழ்க்கையை முன்வைத்து அதனை எழுதுபவர்கள் ஒருபுறம். ஜோதிஜி இதில் .இரண்டாம் வகை.

 செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்த இவர், வேலை நிமித்தமாக திருப்பூருக்கு குடிவந்து ஏறத்தாழ முப்பத்தாண்டுகாலம் திருப்பூர்வாசியாகவே மாறிவிட்டனர். பின்னலாடைத் தொழிலின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நிலைகளில் வேலை செய்து இன்று தொழில்முனைவோராக வளர்ந்து இருப்பவர்.

மின்புத்தகங்களுக்கான சந்தையை விரிவாக்க, அமேசான் நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. எழுத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே அங்கீகாரம் செய்யும் யார்வேண்டுமானலும் புத்தகங்களை எழுதி, அதனை மின்புத்தகங்களாக உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டு இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதன் பின், நம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். பெரியோர்களே ! தாய்மார்களே ! நான் எழுதிய புத்தகத்தை தரவிறக்கம் செய்து, பக்கங்களைப் புரட்டி, புத்தகத்திற்கு உங்கள் விமர்சனங்களை எழுதி, கூடவே தரமதிப்பீட்டில் நட்சத்திர குறியீடு செய்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று எழுத்தாளர்கள் இணையமெங்கும் மின்னல் வேக பிரச்சாரத்தை செய்தனர்.

ஏற்கனவே கவிஞர்களாலும் போராளிகளாலும், செயல்பாட்டாளர்களாலும் நிரம்பியுள்ள தமிழ் கூறும் நல்லுலகு இப்போது மிக அதிகமான எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டுவிட்டது. வழக்கம் போல நம் திராவிட இனமான சிங்கங்கள் களத்தில் குதித்து, 150க்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டு, இணைய அணியின் பிரச்சாரத்தின் மூலம் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து, அனைவருக்கும் ஐந்து நட்சத்திர மதிப்பு அளித்து, வெற்றிக்கோட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றனர்.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இதுதான் போட்டியின் வரைமுறை என்றால் அதனை கைவசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டும். இலக்குதான் வழிமுறை முக்கியம் இல்லை என்ற நினைப்பு எனக்கு இருப்பதால் நான் இதனை குறைகூறவில்லை. என்ன செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி பாட்டுக்கே மூன்றாம் இடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பரிசு பெற்ற முதலிரண்டு பாடல்களைக் காணவே இல்லை. எங்கள் படைப்பு காலத்தை வென்று நிற்கும், என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் போட்டிக்கு ஜோதிஜி ஐந்து முதலாளிகளின் கதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அவரது நீண்ட நெடிய தொழில் பயணத்தில் அவர் சந்தித்த அவர் பணிபுரிந்த தொழில் நிறுவங்களின் அதன் உரிமையாளர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த நூல் அளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள், வெற்றியை நழுவ விட்டவர்கள், பெற்ற வெற்றியை தக்க வைத்தவர்கள், தக்க வைக்காமல் போனவர்கள் என்று நாம் தினம்தோறும் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கும், பார்க்கப் போகும் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் எழுதியுள்ளார்.

ஓன்று வாங்கினால் இன்னொன்றும் கூடவே கிடைக்கவேண்டும் என்ற தமிழனின் தணியாத தாகத்தை தீர்க்கும் பொருட்டு, ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியது பற்றியும், அமேசான் நிறுவனம் நடத்திய போட்டி பற்றியும், அதில் நடந்த அரசியல் பற்றியும், அந்தப் போட்டியை எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றியும் கிண்டில் மொழி என்ற அடுத்த புத்தகத்தையும் சுடச் சுட வெளியுட்டுளார்.

தன்னளவில் எந்தப் படைப்பும் மிகச் சிறந்தது என்று கூறிவிட முடியாது. அது அந்தப் படைப்பு வாசகனை எப்படி பாதிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அது  முடிவாகும். வெவ்வேறு பின்னணியில் இருக்கும் வாசகர்கள் ஒரு படைப்பை வெவ்வேறு விதமாகத்தான் எடை போடுவார்கள். அதன் படி முதலில் விமர்சித்தவர் இந்தப் புத்தகத்திற்கு மூன்று நட்சத்திர தரவரிசையைத்தான் அளித்தார். பாவம், அவருக்கு இந்தப் போட்டியைப் பற்றியோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் படைப்புக்கு ஐந்து நட்சத்திர தரவரிசையை அளிக்க வேண்டும் என்றோ தெரியவில்லை.

தனிப்பட்ட பழக்கம் என்பது வேறு, கட்சி சார்ந்த நிலைப்பாடு என்பது வேறு என்பதில் தெளிவாக இருந்த அவரின் நண்பர்கள் அவரின் புத்தகத்தைப் பற்றி பேசுவதை தெளிவாக தவிர்த்தார்கள். சொக்கா, அமேசான் கொடுக்கிற ஐந்து லட்ச ரூபாய் பரிசும் என் கட்சிக்காரருக்கே கிடைக்கணும் என்ற தருமியின் நிலைதான்.

இதுபோன்ற அரசியல் பற்றி, நாளை யாராவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நினைத்தால் எப்படி கூட்டம் சேர்த்து, இந்தப் புத்தகம் போன்ற ஓன்று இதுவரை வெளிவரவே இல்லை, மனிதகுலத்தை உய்விக்க இதுவே இறுதி புத்தகம் என்று எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி இதில் ஜோதிஜி தெளிவாக எழுதியுள்ளார்.

கூடவே ஏற்கனவே எழுதியதை மின்புத்தகமாக மாற்றத் தெரிந்தவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு புது வாய்ப்பு தயாராக உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் ஜோதிஜி எழுதிய திருப்பூர் பற்றிய பல்வேறு நூல்களை திரட்டி, கறாராக பிழை திருத்தி, நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டால், அது கடந்த ஐம்பதாண்டு கால திருப்பூரின், பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சியை, அதனால் ஏற்பட்ட பொருளாதார, சமூக, சுற்றுப்புறசூழல் மாறுபாட்டை விவரிக்கும் கண்ணாடியாக இருக்கும். அப்படியான முயற்சியை ஜோதிஜி முன்னெடுக்கட்டும்

(Visited 110 times, 1 visits today)
+4
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close