அமேதி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரப் பிரதேச மாநிலத்தில், அமேதி தொகுதியில், விவசாயிகள் அவருக்கு எதிராகக் கோஷமிட்டுப் போராடியுள்ளனர்.
நேற்று நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அமேதியில் ஈடுபட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல். அப்போது கௌரிகஞ்ச் என்ற ஊரில் விவசாயிகள் ராகுலுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள், “ராஜிவ் அறக்கட்டளைக்காக எங்களிடத்திலிருந்து நிலங்கள் வாங்கப்பட்டன. ஒன்று எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் நிலங்களையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று கோரினர்.
“எங்களுக்கு ராகுல் மீது அதிக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் இந்த நாட்டில் இருக்க லாயக்கில்லாதவர். அவர் இத்தாலிக்கே மீண்டும் சென்றுவிட வேண்டும். எங்கள் நிலத்தைப் புடுங்கியவர் ராகுல் ” என்று அடுக்கடுக்காக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் குற்றம் சாட்டினார்.
சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு அருகில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நிறுவனம் ராஜிவ் , அமேதி தொகுதியின் எம்.பி-யாக இருந்தபோது, அவரால் திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.