தினம் ஒரு குறள்
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
அந்நிய அரசிடம் அன்போடு பல்வேறு செய்திகளை அவர்கள் ஏற்கும் வகையில் தொகுத்துச் சொல்லுதலும், கசப்பான வார்த்தைகளை நீக்கி, இனிமையான சொற்களைக் கொண்டு அக மகிழ எடுத்துரைத்து, தனது நாட்டின்பால் வேற்று நாட்டவர் விரும்பும் வகையில் நன்மைகளைச் சேர்ப்பவனே தூதுவன் எனும் சிறப்புடையோன் ஆவான்.
இன்றைக்கு ஒரு இயலே படைத்து, தகவல் திரட்டி, அதற்கு ஒரு தேர்வை வைத்து, இந்திய அயல்நாட்டு விவகாரம் (Indian Foreign Affairs) எனும் பட்டப் படிப்பின் மூலம், அயல்நாட்டுக்கான தூதுவர்களை உருவாக்குகிறோம்!
ஆனால், அன்றே தன் நாட்டைப் பிற நாட்டரசர்களிடம் எப்படி முன்னிலைப்படுத்துவது எனும் காரியத்திற்கு ஒரு அதிகாரம் வைத்த பெருமை உடைத்து நம் புலமை என்பதை அறிக!
புலவர்களை, கவிஞர்களை, அறிஞர்களைப் போற்றாத உலகம் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை என்பதே ஆன்றோர் வாக்கு!